பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் 13 வருடங்களின் பின்னர் விடுதலை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை மேல் நீதிமன்றம் வழங்கிய ஆயுட்கால சிறைத்தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தனது 21 ஆவது வயதில் கைது செய்யப்பட்ட போது அவரிடம் தேசிய அடையாள அட்டையும் சிறிய தொகை பணமுமே இருந்ததாக சுந்தரலிங்கம் கேதீஸ்வரனுக்காக வாதாடிய மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்ட ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

எனினும் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே அவரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது எனவும், அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இந்த வாக்குமூலமும் கடுமையான சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பெறப்பட்டிருந்ததாகவும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் மேலும் கூறியுள்ளது.

இதன்போது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட மொனராகலை மேல் நீதிமன்றம் அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
குறித்த தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மொனராகலை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு நிராகரிக்கப்பட்டு சந்தேகநபரான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரலிங்கம் கேதீஸ்வரன், காலி பூசா தடுப்பு முகாம் மற்றும் மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மொனராகலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி, அவர் கூரை மீதேறி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam