கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் விசேட பிரதிநிதி
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் துசித சுதர்சனவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்த போது குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினர் அவரை கைது செய்துள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இரகசிய வாக்குமூலம்
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட 8 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மார்ச் 06 அன்று, சமன் ரத்நாயக்க, தரமற்ற மனிதஇம்யூனோகுளோபுலின் மோசடிக் கொள்முதல் தொடர்பாக மாளிகாகந்த நீதவானிடம் 4 மணி நேர இரகசிய வாக்குமூலத்தையும் அளித்துள்ளார்.
முன்னதாக 2023 அக்டோபரில், இரத்த பிளாஸ்மா களங்களால் உற்பத்தி செய்யப்படும்
மனித இம்யூனோகுளோபுலின் என்ற என்டிபொடியைக்( பிறப்பொருள் எதிரி) கொண்ட ஒரு
தொகுதி குப்பிகளை கொள்முதல் செய்வதற்காக சுங்க அனுமதியைக்கோரி, போலி ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்பட்டதைக் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், கண்டறிந்தது,
இதன் பின்னர் அந்த கொள்முதல் பொருட்கள் தர சோதனைகளிலும் தோல்வியடைந்தன.
இதற்கமைய அறிக்கையின்படி, 22,500 குப்பிகளை சட்டவிரோதமாக கொள்முதல் செய்ததன் மூலம் 144 மில்லியன் ரூபாய்கள் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |