பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீட்டில் சிக்கிய 49 வயதான நபர்
மட்டக்களப்பு - காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வர்த்தகரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலை காத்தான்குடி அல் அமீன் வீதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 86.356 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் சிக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 49 வயதானவர் எனவும், பிரதேசத்தில் வாகனம் திருத்தும் கராச் ஒன்றை நடத்தி வரும் நிலையில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.