தமிழ் அரசியல் கைதிகள் அவமானப்படுத்தப்பட்டமை கண்டிக்கத்தக்கது! அருட்தந்தை சக்திவேல்
மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் அவமானப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா சக்திவேல் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ சிறைச்சாலைகள் குடும்ப தினத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பார்வையிட சென்ற உறவுகளை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக இனவாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு உள ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதை, சிறைச்சாலை நிர்வாகமும், சிறைச்சாலைகள் அமைச்சும் விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு இச்சம்பவம் தொடர்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.
சிறைச்சாலை குடும்ப தினம்
சிறைச்சாலைகள் குடும்ப தினம் என்பது கைதிகளுக்கு கிடைக்காத குடும்ப மகிழ்ச்சியை மீள பெற்றுக் கொடுத்தல் மற்றும் அந்த குடும்ப மகிழ்ச்சியை தக்க வைப்பதற்கும் கைதிகள் திருந்துவதற்குமான ஒரு மனநிலையை உருவாக்குவதாகும்.
இத் தினத்தில் சுதந்திரமும், மனித உரிமையும் காக்கப்பட்டு உறவுகளும் கைதிகளும், மகிழ்ச்சியடைய வேண்டும். அத்தகைய மகிழ்ச்சி தமிழ் கைதிகளுக்கும், அவர்களின் உறவுகளுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
இதனை சீர் செய்ய வேண்டும் எனில் சிறை அதிகாரிகளுக்கு சட்டம் தொடர்பில் மட்டுமல்ல சீருடைக்கும் கையில் வைத்திருக்கும் ஆயுதத்திற்கும் அப்பால் ஒழுக்கம், மனித உறவு, மனித கௌரவம் தொடர்பிலும் பயிற்சி பெறுவதற்கு வழி வகுக்க வேண்டும்.
குற்றம் இழைத்த அதிகாரிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட வேண்டும். தமிழர்கள் விடயத்தில் இது நடக்கப் போவதில்லை என்பது எமது கடந்த கால அனுபவமாகும்.
கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
அதேவேளை ஆட்சியாளர்கள் அரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களையும், கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும், புதிய பாதுகாப்பு
சட்டம் கொண்டு வரப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று
கூறிக் கொண்டிருக்காது அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்
வேண்டுகோள் விடுக்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.