14 வருட சிறை வாசத்தின் பின்னர் அரசியல் கைதி விடுதலை (Photos)
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்யன் என்ற அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆதித்யன், 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நிரபராதி எனத் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக 2007ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கையடக்க வானொலிகள் உட்பட சில நவீன தொழில் நுட்ப உபகரணங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையத்தில் ஒப்படைக்க வவுனியா இரட்டைபெரியகுளத்தடியில் 7711 லொரியில் வரும் பொழுது, வவுனியா பொலிஸாரினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்ற புலனாய்வுத்துறைக்கு கையளிக்கப்பட்டது.
ஆதித்யன் 2009 ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டுக்களுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினத்தின் மகனான ஆதித்யன் , ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதியினால் 14 வருடங்களின் பின்னர் நிரபராதியென இன்றைய தினம் (10.01.2023) விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் எதிரியான கனகரத்தினம் ஆதித்யன் சார்பில் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ் அணுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் வழக்காடியிருந்தார்.



