இரணை தீவில் மக்களின் கடும் எதிர்ப்பை மீறி சடலங்களை புதைப்பதற்கான ஏற்பாடு
"கோவிட்-19 " தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் இரணை மாதா நகர்ப்பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டனர்.
எனினும் தொடர்ச்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் இரணை தீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இரணை தீவு பிரதான இறங்குதுரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்குக் குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்படப் பல தரப்பட்ட தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாகச் சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும், இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணை தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றைய தினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் இரணை தீவு பகுதிக்குச் செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாகச் செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்குச் செல்வதற்கு முன் அடையாள அட்டையைக் கடற்படையினரிடம் ஒப்படைத்துச் செல்லவேண்டும் எனப் பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.






