யாழில் மீண்டும் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!
தென்மராட்சி – கொடிகாமம், பாலாவி காட்டு பகுதியில் இன்று இரவு சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்றின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணல் ஏற்றிச் சென்ற ட்ரக்டரை நிறுத்த எடுத்த முயற்சி பலனளிக்காமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் ரயர் ஒன்றில் சன்னம் துளைத்தமையால் அது காற்றுப் போய் காணப்படுவதாக தெரியவருகிறது. உழவு இயந்திரத்தை இயக்கிச் சென்றவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதால் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.
இதேவேளை, யாழ் – பருத்தித்துறையில் வீதித் தடையை மீறி பயணித்த கெப் வாகனம் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் 23 மற்றும் 26 வயதான இளைஞர்கள் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.