ஜனாதிபதி வழங்கியுள்ள விசேட அறிவுரை! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வெளியிடும் தகவல்
கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் நாள் ஒன்றுக்கு700 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவ 22வது படை பிரிவில் இன்று (27) நடைபெற்ற சேதனப் பசளை உற்பத்திகளை உத்தியோகபூர்வமாக இலங்கை லக்பொஹர நிறுவனத்திற்கு கையளித்து விட்டு கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துடன் தற்போது நாளொன்றுக்கு 15 தொடக்கம் 30 வரையிலான மரணங்கள் பதிவாகின்றது. இதற்குள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதியான மக்கள் தொகையில் 84 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்ட விகிதாசாரத்தை விட இந்த விகிதாசாரம் கூடிய அளவாக பதிவாகியுள்ளது.
தற்போது பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவகின்றது. ஜனாதிபதியின் விஷேட அறிவுரையின் பேரில் 60 வயது மேற்பட்டவர்களுக்கும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வர முடியாதவர்களுக்கும் நடமாடும் சேவை வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட புற்றுநோய் உட்பட தீராத நோய்களால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி இன்று முதல்
ஏற்றப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.