ஒரு பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக அர்ஜூன் அலோசியஸ் மீது வழக்கு
ஒரு பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஆண்டனி ரண்டேவ் மற்றும் ஜினேந்திர ஜோன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.
வழக்குப்பதிவு
கொழும்பு கூடுதல் நீதிமன்ற நீதிபதி பவித்ரா சஞ்சீவனி பத்திரண முன்னிலையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான மூவரும், 2019-2020 நிதியாண்டுக்கான பெறுமதிசேர் வரி செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது, வரிவிதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உட்பட்ட குற்றம் என கூறப்பட்டுள்ளது இந்த வழக்கில் உள்நாட்டு இறைவரி ஆணையர் நாயகத்தின் சார்பில் வழக்கறிஞர் தினேஷ் பெரேரா நீதிமன்றத்தில் முன்னிலையாகி விசாரணையை கோரினார்.
சந்தேக நபர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அர்ஜுன் அலோசியஸிற்கு ஏற்கனவே வரி ஏய்ப்பு தொடர்பில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.