மடுவில் பங்குதந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில் நேற்று காலை வயல் காணியில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் விவசாயம் செய்து வருகின்ற போதும் அந்த பணியை தமக்கு வழங்குமாறு மடு ஆலய நிர்வாகம் விவசாயிகளுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகப் போராடி மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் அவருடைய அனுமதியின் பெயரில் குறித்த வயல் காணியை உழவு செய்து பயிர் செய்யத் தயாராகி வருகின்றனர்.
இதன்போது அத்துமீறிப் பிரவேசித்த பங்குத்தந்தையும், மடு தேவாலயத்தில் வேலை செய்கின்ற சிலரும் இரண்டு உழவு இயந்திரங்களில் வருகைதந்து அத்துமீறி விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் குறித்த பங்கு தந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பங்கு தந்தை குறித்த வயல் காணியை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
இதே போன்ற ஒரு நிகழ்வு சிறுபோக நெற்செய்கையின் போதும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.