முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள் : சபையில் சீமானைத் திட்டித் தீர்த்த அர்ச்சுனா எம்.பி
யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19.05.2026) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமீபத்தில் நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால் பதிக்கும் போதுதான், இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை.
அடக்கப்படும் தமிழர்கள்
முன்னர் நான் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குமாறு கூறினேன். ஆனால் இப்போது, ஒட்டுமொத்த இலங்கையையுமே தமிழகத்திற்கு கொடுக்குமாறு கூறுகின்றேன். காரணம் இங்கு தமிழன் அடக்கப்படுகின்றார். ஊழல் நிறைந்துள்ளது. நான் அப்பாவி சிங்கள மக்களை எதிர்ப்பவன் அல்ல.
சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதையே விரும்புகிறேன். 2009 மே 18 இல் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அடக்குமுறை அரசை மட்டுமே தான் எதிர்க்கிறேன். தமிழ் மற்றும் சிங்களப் பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் வேற்றுமைகள் இல்லாத போதும், சுயநல அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியலால் தான் சாதாரண மக்கள் வீதிகளில் அடிபடும் நிலை உருவாகிறது.
தமிழினத்தின் வலி
தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நோக்கிப் பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளுக்குக் கடுமையான கண்டனங்களை அவர் பதிவு செய்ததுடன், தமிழ் மக்களின் வலிகளையும் தியாகங்களையும் திரள் நிதி சேகரிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.