நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை: தவிசாளர் நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு(Photo)
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே வழக்கு மீள முன்னெடுக்கப்பட முடியும் என கடந்த வருட ஆரம்பத்தில் பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் வழக்கு மீளவும் நாளை(15) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் ஏப்பிரலில் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு
இந்த வழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமத்திற்குத் தடை ஏற்படுத்தியதாக மேலும் சிலரை இணைக்கவுள்ளதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம், தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இக் கிணற்றில் பிரதேசத்தை, பிரதேச சபை தொடர்ச்சியாக அரச பெறுகை கேள்விக்கோரல் நடைமுறைகளின் பிரகாரம் குத்தகைக்கு வழங்கி வந்துள்ளது. அந்த இடத்திலேயே தொல்லியல் திணைக்களம் செயற்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் இவ் வழக்கை சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் பொலிஸார் தாக்கல் செய்திருக்கவேண்டும்.
நிலாவரையில் பிரதேச சபை பல முதலீடுகளைச் செய்துள்ளது. தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதிபெற்றே தொல்லியல் திணைக்களம் செயற்படும் என உத்தரவாதமளித்துள்ளார்.
ஆனால் இங்கு பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் எனஅக் கருத்தினை வலியுறுத்துகையில் அரசகருமத்திற்கு தடை ஏற்படுத்தினார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது என கடந்த வருடம் ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையில் முன்வைத்தனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபையின் தலைவர் என்றவகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருத முடியாது. நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது எனவே இவ் வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என மன்றில் முன்வைத்தனர்.
தனியார் மற்றும் அரசதாபனம் எதுவாக இருந்தாலும் பிரதேச சபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.
நிலாவரை
இந்த வழக்கினை கடந்த வருடம் விசாரணை செய்த நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, பொலிஸார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.
அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
பிரதேசசபைத் தவிசாளர் இவ்வழக்கில் மேலதிக விசாரணைகள் தேவைப்படின் தவிசாளர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மீளவும் இவ் வழக்கிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை முதலாவது சந்தேக நபராக அடையாளப்படுத்தி நாளை புதன்கிழமை (15) மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து
நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் அத்திவாரம் போன்று
கிடங்குகளை வெட்டிய நிலையில் அங்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்புக்களை அடுத்து
பொலிஸ் நிலையத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் இணக்கத்திணை
ஏற்படுத்துதல் என அழைக்கப்பட்டு பொலிஸ் அதிகாரிகளினால் தவிசாளர் நிலாவரையில்
தலையிடக்கூடாது என வலியுறுத்தப்பட்ட நிலையில் தவிசாளர் அதனை ஏற்க
மறுத்திருந்தார். இந் நிலையிலேயே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.