மதுவரி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை நடைமுறைபடுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள்
மதுவரி வசூலிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அறவிடப்படவேண்டிய வரியை வசூல் செய்தல், கருப்புப் பட்டியிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வரி வசூலிக்க முடியாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்தல் போன்ற புதிய முறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், வரி அறவீடு செய்வதில் தற்போதுள்ள சட்டதிட்டங்களில் காணப்படும் குறைபாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மதுவரி உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
பாதிப்புகள்
அதேவேளை, உற்பத்தி மற்றும் பொதியிடல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளினால் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, செயற்கைக் கள்ளு பாவனையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் ரோஹன சேனாரத்ன, பிரதி மதுவரி ஆணையாளர் ஆர். வி. எஸ். திஸ்ஸ குமார, உதவி மதுவரி ஆணையாளர் எம். ஜே. டி சில்வா, பிரதம நிதி அதிகாரி ஜி. ஏ. சாந்தனி, பிரதம கணக்காளர் டபிள்யூ. ஆர். பரணகம உள்ளிட்ட மதுவரித் திணைக்கள உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
படப்பிடிப்பை தாண்டி ஜாலி டூர் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்... வீடியோ பாருங்க Cineulagam
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri