அநுர வசிக்கும் சிறிய அறை..! அமைச்சர் வெளியிட்ட தகவல்
பல்லேகமவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தின் சிறிய அறை ஒன்றிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றும் வசித்து வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலத்தில் ஜேவிபி தொடர்பில் பொய் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இன்றைய காலத்திலும் அதே பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
பொய் பிரசாரங்கள்
ஜேவிபியினர் வந்தால் நாடு வங்குரோத்து அடையும், நாடு பின்நோக்கி செல்லும், அவர்களுக்கு அனுபவம் இல்லை, அவர்களால் செய்யமுடியாது என பல்வேறுபட்ட பொய்களை கூறிவந்தனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் நாங்கள் பல விடயங்களை செய்துகாட்டியிருக்கின்றோம்.
நாங்கள் எங்கள் வரபிரசாதங்களை எடுக்கவில்லை. ஏனென்றால் இது மக்களின் ஆட்சியென்ற காரணத்தினால் நாங்கள் வரப்பிரசாதங்களை எடுக்கவில்லை.
சுமை இல்லாத அரசியல்
ராஜபக்சக்களினால் இவ்வாறான ஆட்சி முறையினை ஏற்படுத்தமுடியாது. அவர்கள் முன்னெடுத்தது குடும்ப ஆட்சிமுறையாகும். ரணில் விக்ரமசிங்கவும் மக்கள் ஆட்சியை முன்னெடுக்கவில்லை. அவர் செய்தது அவர்களின் நண்பர்களின் ஆட்சியாகும்.
எங்களது அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஒருபோதும் மக்களுக்கு பாராமாக இருக்கமாட்டார்கள்.
நாங்கள் எங்களுக்கான மாளிகைகளை எடுத்திருந்தால் அதற்கான செலவுகளை மக்கள் பணத்திலேயே செய்யவேண்டும். மக்களுக்கு ஒரு சுமையும் இல்லாத அரசியலையே நாங்கள் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




