வவுனியாவில் முகக்கவசம் அணியாதவருக்கு கோவிட் தொற்று உறுதி!
வவுனியா நகரப் பகுதியில் முகக்கவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர்களுக்கு இன்று (25.05) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரம், பசார் வீதி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, ஹொரவப்பொத்தானை வீதி, சந்தை உள்வட்ட வீதி, மன்னார் வீதி என்பவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்களும், பொலிஸாரும் வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் அணியாது பணியாற்றியோர் மற்றும் சீராக முகக்கவசம் அணியாதோர் ஆகியோரை இன்று கைது செய்து கொண்டு சென்றதுடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு 50 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 16 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து கொண்டு சென்றவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும்,
அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.


