யாழில் அச்சுறுத்தலாக மாறியுள்ள நோய்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி ம.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை இன்று ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தை பொருத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
குறிப்பாக இளம் வயதினருக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாகக் காணப்படுகின்றது.
இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகுவோருக்கு எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
குறிப்பாக இந்த நீரிழிவு நோய்த் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன.
குறிப்பாகப் பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அல்லது தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயைக் குணமாக்க முடியும்.
அல்லது நோய்த் தொற்று காணப்பட்டால் அதனை முறையாகப் பின்பற்றிக் குணப்படுத்த முடியும்.
எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாகச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் இடம்பெறும் நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



