நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் வெளியான மற்றுமொரு மோசடி செயல்
சிறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் குறித்து மற்றுமொரு மோசடி செயல் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரிசாட் பதியுதீன், கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த போது, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தனது மனைவியுடன் உரையாட முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிஷாத் பதியுதீனிடம் இருந்து 6 ஆம் திகதி காலை 11:55 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, ரிஷாத் பதியுதீன் எம்.பி, வெலிக்கடை மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மனைவியுடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த அழைப்பை எடுத்த வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை அதிகாரி இவரது கோரிக்கையை மறுத்துள்ளதாகவும்,அது சிறைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசாட் பதியுதீன் தனது மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்திய தொலைபேசி எண் நாடாளுமன்றத்திற்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ரிசாட்டின் சிறைக்கூடத்தில் இருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டிருந்ததுடன்,அதனை வழங்கிய சிறை அதிகாரிக்கும் இடம்மாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.