இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு குழப்பம்
இந்திய பிரதமர் மோடியின் அமைச்சரவை மாற்றத்தை முன்னிட்டு சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ்குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, திபஶ்ரீ செளத்ரி ஆகிய 12 பேர் ராஜினாமா செய்திருந்தனர்.
இந்நிலையில்,மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதவி விலகி இருக்கின்றார். மூன்று முக்கியமான அமைச்சரவை பொறுப்புகளை இவர் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் கடந்த சில தினங்களாக கடுமையான மோதல் நிலவி வருகின்றது.
ஐடி சட்ட விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை. கடந்த பெப்ரவரி மாதம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய ஐடி விதிகள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதியை ஏற்று இதற்கான இந்திய அதிகாரியை நியமித்து விட்டது.
ஆனால்
ஆனால் ட்விட்டர் நிறுவனம் இன்னும் மத்திய அரசின் விதியை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பவர்கள் என்று தொடக்கத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக ட்விட்டர் கருத்து தெரிவித்தது.
அதன்பின் ஐடி விதியை பாதி பின்பற்றி, இந்திய அதிகாரி ஒருவரை இடைக்கால அதிகாரியாக நியமித்து பின் கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம் செய்தது.
மோதல்
இந்த நொடி வரை ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் ஐடி விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை. இதனால் ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் மிக கடுமையான மோதல் ஏற்பட்டது.
ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து ஒரு பக்கம் கூ செயலியில் ரவி சங்கர் பிரசாத் போஸ்டர்களை போட்டு வந்தார். ட்விட்டர் நிறுவனமும் டூல் கிட் விவகாரத்தில் பாஜக தலைவர்களின் ட்விட் அனைத்திலும் manipulated என்ற டேக் போட்டு வம்பிழுத்தது.
வழக்கு
இது போக ட்விட்டர் நிறுவனம் ஒரு படி மேலே போய் ரவி சங்கர் பிரசாத்தின் கணக்கை காப்பி ரைட் கிளைமிற்காக ஒரு மணி நேரம் முடக்கியது. இன்னொரு பக்கம் ட்விட்டர் நிறுவனத்திற்கு அதிர்ச்சி தரும் வகையில் அதன் சட்ட பாதுகாப்பை ரவி சங்கர் பிரசாத் நீக்கினார். இதன் பின் வரிசையாக உத்தர பிரதேசம், டெல்லி, காஷ்மீர் என்று பல இடங்களில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
மோசம்
இப்படி தொடர் சம்பவங்கள் நடந்தும் கூட ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு அடிபணியவில்லை. ரவி சங்கர் பிரசாத் எவ்வளவு முயன்றும் ட்விட்டர் நிறுவனம் இந்திய ஐடி விதிகளை ஏற்கவில்லை. இது அவருக்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது.
சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் மதிப்பும் "ட்விட்டர் vs மத்திய அரசு"என்ற மோதலில் பாதிக்கப்பட்டதும். சர்வதேச ஊடகங்கள் பல இதில் மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதி இருந்தது.
விரும்பவில்லை
கண்டிப்பாக ட்விட்டர் நிறுவனத்துடனான மோதலை ரவி சங்கர் பிரசாத் கையாண்ட விதத்தை பிரதமர் மோடி விரும்பவில்லை. இதன் பொருட்டே தற்போது இவரின் அமைச்சர் பதவியும் பிடுங்கப்பட்டுள்ளது. ஐடி துறையில் பெரிதாக இவர் மாற்றங்களை கொண்டு வரவில்லை என்ற புகார் இருந்தது.
இல்லை
அதோடு மிக முக்கியமாக சட்டத்துறை, தொலைத்தொடர்பு துறை ஆகிய பொறுப்புகளையும் இவர்தான் கவனித்து வந்தார். அந்த துறையிலும் இவர் கவனிக்கத்தக்க அதிரடி எதையும் நிகழ்த்தவில்லை. இதன் காரணமாக தற்போது மொத்தமாக அமைச்சர் பதவியில் இருந்து ரவி சங்கர் பிரசாத் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.