ராஜபக்ச குடும்பத்திற்கு கிடைத்த மற்றுமொரு உயர் பதவி
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நேற்று ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அதனை வழிமொழிந்தார்.
அதற்கமைய, ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் குழுவில் முன்வைக்கப்பட்டு பூர்த்திசெய்ய முடியாமல் போன சில விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கருத்திற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சி
மேலும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு குழுவின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சியொன்றை நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கும் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெடகொட, ஜி.ஜி. பொன்னம்பலம், கோகிலா குணவர்தன மற்றும் சமன்பிரிய ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.