கடுமையான பிறழ்வுகளால் எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு - சுனத் அகம்பொடி
ஏனைய நாடுகளில் இருக்கும் கடுமையான பிறழ்வுகளால் எதிர்வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மற்றொரு உச்சத்தை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக, சமூக மருத்துவப் பேராசிரியர் சுனத் அகம்பொடி (Sunath Agampodi) கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெல்டா மாறுபாட்டின் உச்சம் இப்போது இலங்கையில் முடிந்துவிட்டது.எதிர்வரும் வாரங்களில் மற்றொரு கோவிட் உச்சம் ஏற்பட 60% வாய்ப்பு உள்ளது.
அத்துடன் இறப்பு மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் இருக்கும் கடுமையான பிறழ்வுகளால் எதிர்வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மற்றொரு உச்சத்தை எதிர்பார்க்கலாம்.
தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொது நடமாட்டம் கடுமையாகக் குறைந்த நிலையில் நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருகிறது.
திருமணங்கள் நடத்தப்படாதது மற்றும் கூட்டமான பொது போக்குவரத்து இயங்காதது போன்ற காரணங்களால். இலங்கையில் மிகவும் தொற்றக்கூடிய டெல்டா வகையின் உச்சம் முடிந்துவிட்டதாகச் சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும் வரும் வாரங்களில் அதிகரிக்கலாம்.
அதேநேரம் முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே கூட, பரவல் பரிமாற்ற வீதத்தைக் காணமுடிகிறது என்பது ஆபத்தானது. உலகளாவிய நிலையில், தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்பைத் தடுக்கின்றன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எனினும் கோவிட் பரவுவதை அது குறைக்காது என்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக, சமூக மருத்துவப் பேராசிரியர் சுனத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.