எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் சட்டவிரோத கடல் பயணம்! சிறுவர்கள் உட்பட்ட 35 பேர் கைது!
35 பேர் கைது
கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் 35 பேருடன், மீன்பிடி இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் தடுத்துள்ளனர்.
இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பயணத்தின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் 5 பேர் உட்பட 25 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
நீண்ட பயணத்துக்கு ஏற்ற படகு இல்லை
படகு இடைமறிக்கப்பட்டபோது, படகு பழுதடைந்திருந்ததாகவும், அந்த படகு நீண்ட பயணத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் அனைவரும், கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.