தடுப்பூசி பகிர்வு தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படவுள்ள உலகளாவிய தடுப்பூசி பகிர்வு தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும். இதன்போது எந்தெந்த நாடுகளுக்குத் தடுப்பூசிகளைப் பகிர்ந்தளித்து என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் தமது நாட்டுக்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 13 வீதத்தை அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி வான் ஹொர்ன், ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசிகள் சமமானதாகவும், அறிவியல் மற்றும் பொதுச் சுகாதாரத் தரவைப் பின்பற்றிப் பகிரப்படுவதை உறுதிசெய்யத் தனது நாடு கொவாக்ஸ் மற்றும் பிற அமைப்புக்களுடன் இணைந்து செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எந்தெந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பெறுகின்றன என்பது தமக்குத் தெரியவில்லை, எனினும் விரைவில் அது தொடர்பில் ஒரு முடிவு எடுக்கப்படும். ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவிற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சுமார் 13%தை பகிர்ந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மே 17 ஆம் திகதி அன்று ஜனாதிபதி ஜோ பிடன் ஒரு சர்வதேச மற்றும் ஒருங்கிணைந்த தடுப்பூசி முயற்சியை முன்னெடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகத் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா 80 மில்லியன் குப்பி தடுப்பூசிகளை வழங்கும் என்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி பிடென் முன்னர் அறிவித்த 60 மில்லியன் குப்பி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளும், ஜூன் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 20 மில்லியன் குப்பி அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் இதில் அடங்கும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா தனது தடுப்பூசிகளை இந்த உதவி திட்டத்துக்குப் பயன்படுத்தாது
என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி வான் ஹொர்ன்
குறிப்பிட்டுள்ளார்.