சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, 1,15,000-க்கும் அதிகமான டாங்க் (Tang) மற்றும் யுவான் புரோ (Yuan Pro) வகை மின்சார வாகனங்களை திரும்ப பெறவுள்ளதாக சீன சந்தை ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி 2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 44,535 டாங்க் (Tang) ரக வாகனங்களையும் 2021 பெப்ரவரி முதல் 2022 ஓகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட 71,248 யுவான் புரோ (Yuan Pro ) மின்சார வாகனங்களையும் மீளப்பெற உள்ளது.
இந்த வாகனங்களில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்ய, BYD தனது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மூலம் மென்பொருள் மற்றும் பாகங்களை மேம்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
கார்களுக்கான தேவை அதிகரிப்பு
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 6,843 ஃபங் சென்பாவோ பாவ் 5 (Fangchengbao Bao 5) பிளக்-இன் ஹைபிரிட் SUV-களையும், 2024 செப்டெம்பரில் சுமார் 97,000 டொல்பின் (Dolphin) மற்றும் யுவான் பிளஸ் (Yuan Plus) மின்சார வாகனங்களையும் இந்த நிறுவனம் திரும்பப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தனது கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதன் தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதில் BYD தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



