அங்கஜனுக்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கடும் கண்டனம்
பொது மக்களுடைய கோரிக்கையைத் தட்டிக் கழித்து தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்கின்ற செயற்பாடுகளை அங்கஜன் இராமநாதன் முன்னெடுக்கின்றார் என வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்துள்ளார்.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சபைக்கூட்டம் இன்று (15) நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் சபையின் உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
கிராம அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குக் அங்கஜன் இராமநாதன் எமது பகுதிக்கு வந்தார்.
இதன்போது எமது வட்டாரத்தில் உள்ள விதவைப்பெண் ஒருவர் தமக்கு வீடு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அவர், உங்களுக்கு வீடு அமைத்துத் தருவதற்குப் பிரதேச சபை இருக்கின்றது.
நீங்கள் பிரதேச சபையிடம் சென்று கேளுங்கள் அவர்கள் உங்களுக்கான வீட்டினை அமைத்துத் தருவார்கள் எனக்கூறினார்.
எனவே குறித்த வட்டாரத்தின் உறுப்பினர் என்ற வகையில் அவர் கூறியது தொடர்பாக தங்களிடம் பதிலை எதிர்பார்த்து நிற்கின்றேன் - என்றார்.
அதற்குப் பதிலளிக்கையிலேயே தவிசாளர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தவிசாளர் மேலும் தெரிவிக்கையில்,
தனிப்பட்ட வீடுகளை அமைத்துக்கொடுக்கும் செயற்பாடுகள் எவையும் பிரதேச சபையில் இல்லை.
அதற்குரிய சட்ட ஏற்பாடுகளைக் அங்கஜன் இராமநாதன் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்திக்கொடுத்து உரிய நிதி ஏற்பாடுகளைப் பிரதேச சபைக்கு விடுவிக்கின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக நாங்கள் அதனைச் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். அதற்குரிய நடவடிக்கையை அவர்தான் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் பொது மக்களுடைய கேள்விகளுக்கு உரிய வகையில் பதிலளிக்க வேண்டுமே தவிர பொதுமக்களிடமிருந்து தப்பித்துச் செல்வதற்கு ஏற்ற விதத்திலே இப்படியாக உறுப்பினர்களிடம் நீங்கள் வீடுகட்டிக் கொடுங்கள் என்றும் பிரதேச சபை இருக்கிறது தானே, பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் தானே எனக்கூறுவது அந்த இடத்திலே அவர்களை அவகௌரவப்படுத்துவதாக அமையும்.
எனவே பொதுமக்களுக்குச் சேவையை வழங்குவதற்குரிய முன்மாதிரியாக இருப்பவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. ஆகவே இதனை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அங்கஜனது கருத்திற்கு எதிராக பெரும்பாலான பிரதேச சபையின் உறுப்பினர்கள் தமது கண்டனத்தினை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வரும் அங்கஜன் இராமநாதன் மக்கள் பிரதிநிதிகளதும் சமூக மட்ட அமைப்புகளையும் அழைக்காமல் அவர்களை ஒதுக்கி வைத்துச் செயற்படுவதாக உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam
