வடக்கின் பிரதம செயலாளராக கிருஸ்ணமூர்த்தி ஜெபராஜேஸ்! - அங்கஜன் எம்.பி. பரிந்துரை
இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராக இருந்த கிருஸ்ணமூர்த்தியின் பாரியாரை வட மாகாணசபையின் பிரதம செயலாளராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரைத்துள்ளார்.
கிருஸ்ணமூர்த்தி ஜெபராஜேஸ் தற்போது உணவுக் கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் அதேநேரம் இவரும் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஓர் ஆண்டு மட்டுமே உள்ளது.
அதாவது 1962ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் 2022ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவார்.
வட மாகாண பிரதம செயலாளராகவுள்ள அ.பத்திநாதன் எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் அவரது இடத்துக்குப் புதியவர் ஒருவர் நியமிக்கப்படலாம் அல்லது தற்போதைய பிரதம செயலாளருக்கு மேலும் ஓர் ஆண்டு சேவை நீடிப்பு வழங்கப்படலாம் என்ற நிலையில் பிரதம செயலாளர் பதவி தொடர்பில் பெரிதும் பேசப்படுகின்றது.
இதேநேரம் வட மாகாணம் தொடர்பிலும் மாகாணசபை முறைமை தொடர்பிலும் அதிகம் அறிந்த வட மாகாணத்தைச் சேர்ந்த இ.இளங்கோவனையே வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்குமாறு ஒரு தரப்பு கோரி நிற்கும் வேளையில் கிளிநொச்சி மாவட்ட
அரச அதிபர் உட்பட மேலும் இருவரது பெயர்களும் குறித்த விடயத்தில் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.