மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குருதிப்பற்றாக்குறை
பௌத்த மக்களின் புனித வெசாக் தினமான இன்று மட்டக்களப்பு கறுவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆயராக பிரகடனப்படுத்தப்பட்டு 13வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையிலும் இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து புனித வனத்து அந்தோனியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை நிலவிவருவதாக பல்வேறு தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கும் நடவடிக்கைகள் குறைவான நிலையிலிருந்ததன் காரணமாக வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
புனித வனத்து அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜே.ஏ.ஜி.ரெட்னகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர். கோவிட் அச்சுறுத்தல் காரணமாகச் சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு மட்டுப்படுத்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.