செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் இணையவுள்ள வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம்!
யாழ்.செம்மணியில் நடைபெறுகின்ற 'அணையா விளக்கு' போராட்டத்திற்கு, எதிர்வரும் புதன் கிழமை தமது பூரண ஒத்துழைப்பை தருவதாக வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
தமிழரின் கடமை
இதனடிப்படையில், செம்மணி மனித புதைகுழி எச்சங்கள், தமிழினத்திற்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவழிப்பின் முக்கிய ஆதாரங்கள் என சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் இந்த மூன்று நாள் ஆரப்பட்டத்தில் பங்கு கொள்வது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமை என கருதி வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம் தம்மால் இயன்ற பூரண ஒத்துழைப்பை தருவதாக அந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயளாலர் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் வரையிலும் போராட்டம் ஒன்று இன்று முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
