ஆனந்த சுதாகர் உட்பட்ட அரசியல் கைதிகளின் நிலை: ஜனாதிபதி நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவாரா..!
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கடந்த கால அரசாங்கங்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று சில மாதங்கள் கடந்து விட்டன. 2009ஆம் ஆண்டு இந்த நாட்டில் இறுதி யுத்தம் நடைபெற்ற போது நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்கள் புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இதே காலப்பகுதியிலும் இதற்கு முன்னரும் இராணுவ சுற்றி வளைப்புக்களின் போதும், பொலிசாரின் தேடுதல்களின் போதும், புலனாய்வாளர்களின் செயற்பாட்டின் மூலமும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயறபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் பலர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு தாக்கல்
கடந்த 10, 15 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இவ்வரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக இன்று வரை வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
இன்னும் சிலருக்கு விசாரணைகளின் போது அவர்களால் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தைக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு வழக்கு விசாரணைகள் நிறைவுறும் நிலையில் மீண்டும் புதிய வழக்குகளும் போடப்படுகின்றது. மேலும் சிலர் பயங்கரவாதத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தார்கள். அது தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றை பார்க்கின்ற போது இதற்கு பின்னால் சட்டம், நீதி என்பதற்கு அப்பால் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பது புலனாகின்றது. அரசியல் கைதிகள் தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதாக கடந்த காலங்களில் அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதும் அது நடைபெறவில்லை.
அரசியல் கைதிகளின் விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் உரிய வகையில் செயற்படவில்லை என்ற காரணம் காட்டி சட்டமா அதிபர்களும் மாற்றப்பட்ட வரலாறும் நல்லாட்சியில் பதிவாகியுள்ளது.
இதே காரணத்திற்காக நீதி அமைச்சரும் கூட மாற்றப்பட்டிருந்தார். இவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி நோக்குகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளும் அரசியல் நோக்கங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தை வலுவாக்குவதற்கு சான்றுகளாக அமைகின்றன. இந்த நிலையில், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.
சிறை வாழ்வு
அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை அவர்கள் சிறைக் கூடங்களில் இருப்பதாலும், அவர்கள் மீதான விசாரணைகளின் போது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களாலும் உடல், உள ரீதியாக கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
அவர்கள் தமது வாழ்நாட்களைக் எண்ணிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களது குடும்பங்களும் தமது பிள்ளைகள், கணவன்மார், அப்பா எப்ப வருவார்..? என்ற ஆதங்கத்துடன் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கணவர் ஆயுட் கைதியாக தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி எண்ணி பிஞ்சுக் குழந்தைகளை எப்படி ஒரு ஆண் துணையின்றியும், குடும்பத் தலைவனின் துணையின்றியும் வளர்த்து எடுக்கப் போகிறோம் என்ற ஏக்கத்தில் செய்வதறியாது குழம்பிய நிலையில் நோய்வாய்ப்பட்டு அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் மனைவி யோகராணி என்ற இளம் யுவதி 2018ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி மரணத்தை தழுவினார்.
பால் மனம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் இரண்டை நிர்கதியாக்கிவிட்டு தாய் மரணத்தை தழுவிக் கொள்ள தந்தை சிறைக் கூண்டிற்குள் முடங்கிப் போனார். குடும்ப சூழலை சற்றும் கணக்கில் எடுக்காத அரச நிர்வாகம், மனைவியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.
தனையன் தாயின் சிதைக்கு கொள்ளி வைப்பதற்காக இடுகாடு செல்கையில், தந்தை சிறைக்கூடம் செல்வதற்கு வாகனம் ஏறினார். பாலகி செய்வதறியாது தந்தையின் காலடி தடம் பற்றி அதே சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவமும் பதிவாகியது. கண்டவர்கள் ஒரு கணம் செய்வதறியாது விக்கித்து நிற்க பொலிஸார் உட்பட அனைவரது நெஞ்சங்களும் மனசாட்சியை உலுப்பி எடுக்க, தங்களை அறியாமலேயே தங்கள் கடமையை மறந்து கண்ணீர் சிந்தினர்.
கருணை மனுக்கள்
இந்த சம்பவம் அனைவரது மனத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து கருணை மனுக்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். அப்போது வடக்கு முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுக்கு ஆனந்த சுதாகர் மீது கருணை காட்டுமாறு கடிதமும் எழுதியிருந்தார்.
அப்போதைய அரசாங்கத்தின் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பில் குரல் கொடுத்திருந்தனர். ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் கூட ஜனாதிபதியிடம் தமது அப்பாவை விடுதலை செய்யுங்கோ மாமா என உருக்கமாக கோரியிருந்தனர்.
ஆனால் அவை கருத்தில் எடுக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் பலரை சிறைச்சாலைகளிலேயே இழந்திருக்கின்றோம். இன்று அவர்களின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் அவர்களது குடும்பங்களையும் இழந்து வருகின்றோம். இதனை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆனந்த சுதாகர் மட்டுமல்ல அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
அதற்காக தமிழ் தலைமைகளும், ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஓரணியில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடந்த டிசம்பரில் கூட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம்
இதன்போது அவர், தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும், கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றன. தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்? எந்தெந்தச் சிறைச்சாலைகளில் தடுத்துவைத்துள்ளனர்? அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? மனிதாபிமான அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ரவிகரன் ஆகியோரும் அரசியல் கைதிகள் குறித்து இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இது மிக முக்கிய பிரச்சினையாகும். எனக்கு ஒரு வாரம் தாருங்கள்.
முழுமையான பதில்களை நிச்சயம் வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த முடிவு தமிழ் மக்களுக்கு நன்மை தரும் முடிவாக அமைய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரார்த்தனையாகும். நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. அனைவரும் ஒண்றிணைந்து இன, மத பேதமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளதுடன், க்ளீன் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவான நிலை உருவாக வேண்டுமெனில் முதல் கட்டமாக அவர்கள் முன்னுள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அதன் முதல் படியாக ஆனந்த சுதாகரையும் அதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த அரசியல் கைதிகள் விடயத்திலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து தனது நல்லெண்ணத்தை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்.
தேர்தல் காலங்களின் போது அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி கூறியும் இருந்தார். அதற்கேற்ப அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதன் மூலமே இந்த நாட்டில் நிலையான அமைதியையும், உண்மையான நல்லிணக்கத்தையும், நீண்டகால அபிவிருத்தியையும் ஏற்படுத்தக் கூடிய க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னகர்த்த முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |