டக்ளஸினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்
வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்துக்கு வேண்டாம் எனவும், ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியமையை கண்டித்தும், ஆட்சேபித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு நேற்று (28) அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக இன்று (29) உடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வலியுறுத்தல்
“வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில் நந்தனன் மற்றும் விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகிய மூவரையும் ஜீவன் தியாகராஜா தூக்கியெறிந்தமை ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.
மாகாணத்தில் உள்ள மூத்த அமைச்சரான தனது ஆலோசனையை கூட பெற்றுக்கொள்ளாது, நிர்வாக நடைமுறைக்கு முரணாக, மேற்கொண்ட இந்த விடுவிப்பு உத்தரவுகள் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்.
ஒரே தடவையில் அதிக அதிகாரிகளை மாகாணத்துக்கு வெளியே அனுப்புவது மாகாணத்தின் பணியை பாதிக்கும் செயல் என்பதோடு, ஏனைய அதிகாரிகளையும் மனதளவில் பாதிக்கும் செயலாகவும் அமையும்.
நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களை இடமாற்ற பொது சேவை ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்க முடியுமேயன்றி ஆளுநர் நேரடியாக இடமாற்ற கடிதம் வழங்க முடியாது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்”
கோரிக்கை
இவற்றை உடன் கவனத்தில் எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பதிலளித்துள்ளதோடு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவா, நிர்வாக நடைமுறையா என்ற போட்டி எவ்வளவு உச்சம் பெறும் என்பது இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், வேறு மூத்த அதிகாரிகள் இருவர் இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்று ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.