கிழக்கு மாகாண ஆளுனர் துரத்தப்பட வேண்டியவர்: எஸ்.லோகநாதன் சூளுரை (Photos)
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் துரத்தப்பட வேண்டியவர் ஆவார் என்று கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.
கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாச கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”புலம்பெயர்ந்து வாழ்கின்ற வட மாகாண உறவுகளின் பங்களிப்பு மூலம் சிக்கன கடனுதவு கூட்டுறவு முறைமை மூலம் எமது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்ற வேலை திட்டங்கள் பலவற்றையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.
அவர்கள் எமது கிழக்கு மாகாண மக்கள் மீது காட்டுகின்ற அன்பு, அக்கறை ஆகியவற்றுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக் உள்ளோம்.
அரசியல்வாதிகள் செய்து தர வேண்டியவற்றை அவர்கள் முன்னின்று செய்து தருகின்றார்கள்.
கிழக்கு மாகாண ஆளுனர்
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் துரத்தப்பட வேண்டும். அவர் எமது மக்களுக்கு இது வரை உருப்படியாக எதையும் செய்து தரவே இல்லை.
எமது மண்ணையும், மக்களையும் வாழ வைக்க தவறி விட்டார். அவர் இறக்குமதி செய்யப்பட்டவர் என்பதால் எமது மண் மீதும், எமது மக்கள் மீதும் அவருக்கு உண்மையான அக்கறை கிடையாது.
நான் இந்த இடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காலம் சென்ற தலைவர் அஷ்ரப்புக்கு நன்றி கூறுகின்றேன்.
ஏனென்றால் மல்வத்தை மக்களுக்கு அவர் சந்தை ஒன்றை கட்டி கொடுத்து இருக்கின்றார். இங்கு வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட வேண்டும். மக்கள் வங்கி கிளை ஆரம்பிக்கப்பட வேண்டும். ஏராளமான அபிவிருத்திகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவற்றுக்கு வசதியாக தனியான பிரதேச செயலகம், தனியான பிரதேச சபை மல்வத்தையை மையமாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக நான் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மூலம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றேன். ஆணை குழு முன் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியும் உள்ளேன்”என்றார்.