அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று(26.03.2026) நடந்த கூட்டமானது, அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாரச்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சில முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளார்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்படி, களியோடை பாலத்தின் மேல் பகுதியில் காணப்படும் மண் திட்டியை அகற்றி சேதமடைந்த களியோடை ஆற்றின் இடது கரையை (வடக்கு புற பகுதி) புனர்நிர்மாணம் செய்து நிரந்தர பாதுகாப்பு அமைப்புகளை நிர்மாணித்தல்.

கடந்த 2026 ஆம் வரவு செலவு திட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதியால் நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல், நிந்தவூர் கமு/கமு/ அல் - மதீனா மகா வித்தியாலயத்திற்கு ஆராதனை மண்டபமும் மற்றும் வகுப்பறைத் தொகுதிகளைக் கொண்ட மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைத்தல். மேற்கண்ட முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், அஷ்ரப் தாஹிர் , கே.கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம்.ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


