சர்வதேச மன்னிப்புச் சபை, இந்தியா மீது பரபரப்புக் குற்றச்சாட்டு
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட “மேட் இன் இந்தியா” (Made in India) என்ற தலைப்பிலான அறிக்கையில், ஏற்றுமதி சார்ந்த விரிவான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 7, 2023 முதல் நவம்பர் 30, 2025 வரையிலான காலத்தில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்குக் குறைந்தபட்சம் 2,596 ஆயுத ஏற்றுமதி கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சிறிய ரக ஆயுதப் பாகங்கள், பீரங்கி குண்டு உரைகள் மற்றும் 'லோயிட்டரிங் டியூனிஷன்ஸ்' எனப்படும் ட்ரோன்களுக்கான வெடிமருந்து தலைப்பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இவை இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ், ரஃபேல் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அனுப்பப்பட்ட ஆயுதங்களை விநியோகம் செய்த நிறுவனங்களில் பல, நேரடியாக இந்திய அரசின் கீழ் அல்லது கட்டுப்பாட்டில் இயங்குபவை என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்த இந்தியா தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய விநியோக நிறுவனங்களின் உரிமையாளராகவும் கட்டுப்பாட்டாளராகவும் இருந்து, இஸ்ரேலுக்குச் செல்லும் ஆயுதங்களை இந்தியா தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த ஆயுதப் பரிமாற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டின் மத்தியில், இது தொடர்பாக இந்திய அரசுக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 9 உற்பத்தி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அறிக்கை வெளியாகும் வரை எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.