13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது என ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (25.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தத்தை தமிழ்
மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு அதிலிருந்து நாம்
முன்னேறி மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எமது கட்சி
வலியுறுத்தி வந்திருக்கின்றது.
அரசியல் தீர்வு
எமது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை விளங்கிக்கொண்ட உலக வல்லரசான அமெரிக்கா இன்று சில நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளை அழைத்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது புத்திசாலித்தனமானது என்ற கருத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விடயமானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்க்கதரிசனமான தூர நோக்கு கொண்ட அரசியல் தீர்வு முயற்சிக்கான ஓர் அங்கீகரமாக பார்க்கப்படுகிறது.
எமது பிரச்சினையில் தலையிடாது எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நாமே தேடிக்கொள்ள வேண்டும் என எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியபோது சில அரசியல் கட்சிகளும் ஆய்வாளர்களும் அதனை பொருட்படுத்தாது ஒரு மலினமான கூற்றாக விமர்சனம் செய்திருந்தனர்.
ஆனால் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சில அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் சர்வதேசம் ஒரு வரையறைக்கு மேல் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தார்.
சர்வதேசம் ஏற்றுக்கொண்டது
அவ்விடயமும் நாங்கள் நீண்டகாலமாக சொல்லிவந்ததே நடைமுறையில் சர்வதேசமும் ஏற்றுக்கொண்டது. இதுவும் எமது நிலைப்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
ஆயினும் சிலர் வாக்குவங்கிகளையும் நாடாளுமன்ற ஆசனங்களையும் இலக்குவைத்து நடைமுறைச் சாத்தியமற்ற வெற்று வாக்குறுதிகளையும் ஆக்கிரோச கருத்துக்களையும் கக்கிய வண்ணமே இருந்தனர்.
இன்று உலக வல்லரசான அமெரிக்கா எனது நிலைப்பாட்டை படிப்படியாக வெளிப்படுத்திவரும் நிலையில் ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு அங்கீகாரம் பெற்றுவருகின்றது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



