மன்னாரில் சோதனைச் சாவடிகளில் பொருட்களை இராணுவத்தினர் பறிப்பதாக குற்றச்சாட்டு
மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனைச் சாவடிகளில் சோதனை என்ற பெயரில் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை இடைமறித்து தங்களுக்கு தேவையான பொருட்களை இராணுவத்தினர் எடுத்து கொள்வதாக வெளி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக வருபவர்களும், விற்பனைக்காகச் செல்பவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக மன்னார் பிரதான பாலப்பகுதியிலும் வங்காலை, குஞ்சுக்குளம் பகுதியிலும் உள்ள சில சோதனை சாவடிகளில் மேற்படி சம்பவம் நிகழ்கிறது.
விற்பனைக்காக வரும் போதும் விற்பனை முடிந்து செல்லும் போதும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் இராணுவத்தினர் எடுக்கும் பொருட்களை விருப்பமின்றி அவர்களிடமே கொடுத்து விட்டு வருவதுடன், வியாபார இலாபம் அதிக அளவில் இவ்வாறான செயற்பாடுகளால் குறைவடைவதாகவும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக யாரைச் சந்திப்பது எவ்வாறு இந்த செயற்பாட்டைத் தடுப்பது என்று கூட தங்களுக்குத் தெரியவில்லை எனவும், எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், மாவட்ட அரசாங்க அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு பாதிக்கப்பட்ட சிறுதொழில் விற்பனை முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



