யாழ். பலாலி வீதி திறப்பு விவகாரம்! வர்த்தமானி தொடர்பில் சுமந்திரன் கேள்வி
யாழ். பலாலி வீதியானது உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக ஒருபோதும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏசுமந்திரன் கூறியுள்ளார்.
யாழ். பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பலாலி வீதி
'கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?
இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை.
மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது.
ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.
அதனை விட முக்கியமான கேள்வி ? தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு படை வசம் இருந்த பலாலி வீதி விடுவிக்கப்பட்டதை மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
குறித்த பகுதி பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது .
இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமை காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் தீபன்


