தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியே இது..! எலபாதகம தேரர் குற்றச்சாட்டு
செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பௌத்த தர்மத்தின் அடித்தளத்தை அழிக்கும் நோக்கிலான சதிகள் காட்டுத்தீ போன்று பரவி வருவதாக எலபாதகம ஞானரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த அடித்தளத்தை அழிக்கும் முயற்சி
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பௌத்த பிக்குகள், பிக்குணிகள், பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆகிய நான்கு அடித்தளங்களைக் கொண்டு பௌத்த தர்மம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
ஒரு மரமும் பட்டையும் போன்று கலாச்சாரத்தின் அடிப்படை அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ள இந்த பௌத்த அடித்தளத்தை அழிக்க சில தரப்பினர் தீவிர முயற்சி மேற்கொள்வதை உன்னிப்பாகக் கவனிக்கும்போது தெரியவருகின்றது.

பௌத்த அடித்தளத்தை அழிக்கும் நோக்கில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வரும் மாற்றுமத சக்திகளின் தாக்கங்கள் தற்போது சமூக ஊடகங்கள் வழியாக காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
இந்த திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் மற்றும் வெளிநாட்டுத் தாக்கங்களுக்கு மத்தியில், பௌத்த பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக நமது அடமஸ்தான பிரதம பிக்கு சம்பந்தப்பட்ட சம்பவத்தில், பல்வேறு வகையான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிக்குகள் மீது பலவிதமான அவதூறுத் தாக்குதல்களை நடத்தி, இந்த சங்கத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன என்றார்.