மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்க வேண்டும்! - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி
இலங்கையானது பெரும் பஞ்சம் ஏற்படக்கூடியநிலையுள்ளதால் சாதாரண மக்கள் பட்டினிச் சாவுகளை எதிர்கொள்ளும் அபாய நிலைக்குத் தள்ளப்படுவர்.
எனவே இன்றைய மோசமான விலை உயர்வுகளாலும் பொருட்களின் தட்டுப்பாடுகளாலும் பாதிக்கப்பட்டு வரும் உழைக்கும் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவே புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி நம்புகிறது.
இன்றைய ஆட்சியாளரின் மக்கள் விரோதப் போக்கினைத் தட்டிக் கேட்கவும் தடுத்து நிறுத்தவும் மக்களின் ஒன்றுபட்ட போராட்ட அணி திரழ்வினால் மாத்திரமே முடியும் என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏற்கனவே கோவிட்-19 கோவிட்டினால் பெயரால் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சியைப் பல தில்லுமுல்லுக்கள் மத்தியில் முன்னெடுத்து வந்த அதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி, அவற்றை நாட்டு மக்களின் தலைகளில் சுமத்தினர்.
அதன் விளைவே அரிசி, சீனி, கோதுமை மா, தானிய வகைகள், பால்மா, மருந்துகள் என்பனவற்றுடன் மரக்கறிகள், மீன், இறைச்சி போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலைகள் மக்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வந்துள்ளன. அத்துடன் எரிபொருட்களின் விலைகள், குறிப்பாகச் சமையல் எரிவாயுவின் விலை நாலாயிரத்தைச் சென்றடைந்தது.
அது மட்டுமன்றி தட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டது. அதேவேளை விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதிலும் வெடித்து மக்கள் படுகாயங்கள் அடைந்ததுடன் ஏழுபேர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
இவற்றிற்கு யார் பொறுப்பு? இத்தகைய அவலங்கள் மத்தியிலே 23 ஆம் திகதி முதல் பெற்றோல் 20 ரூபாவாலும், டீசல் 10 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. தாறுமாறான இவ்விலை அதிகரிப்பால் மீண்டும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்த்தப்படும் நிலை தோன்றியுள்ளது.
அத்துடன் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்த்தப்படும். இவை அனைத்தும் பற்றாக்குறைகளாகவும், கடன்களாகவும் சாதாரண உழைக்கும் மக்களின் தலைகளிலேயே சுமத்தப்படும்.
அதேவேளை நாட்டின் இன்றைய மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கும் சமூக நெருக்கடிகளுக்கும் இன, மத, பிரதேச பிளவுகளுக்கும் காரணமான, ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இருந்துவந்த அனைத்து ஆளும் வர்க்க சக்திகளும் எவ்வித பாதிப்புகளும் இன்றி சுகபோகமாகவே இருந்து வருகிறார்கள்.
இத்தகையவர்கள் ஆளும் தரப்புகளாக இருந்துவந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் குறுக்கு வழிகளில் சேர்த்த பல்லாயிரம் கோடி டொலர்கள் இன்றைய அந்நியக் கடன்களை மீளச் செலுத்தவும் டொலர் கையிருப்புக்கும் போதுமானதாகும். அத்துடன் நாட்டின் வளங்களை அந்நிய வல்லரசுகளின் முதலாளித்துவ சக்திகளுக்கு விற்று, நாட்டை நாசமாக்கும் தேவையும் ஏற்படாது.
இத்தகைய நிலையில் இக் கும்பலிலிருந்து யார் பதவிக்கு வந்தாலும் இன்றைய
நிலைமைகளைச் சீர்செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும். எனவே உழைக்கும்
மக்களின் கைகளுக்கு அதிகாரம் வரக்கூடியதாக, மக்கள் சார்பான பரந்துபட்ட
சக்திகள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதையே சரியான தீர்வுக்கான வழியாக
எமது கட்சி வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.