சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு:அனுரகுமார திஸாநாயக்க
அரசாங்கத்தின் நோக்கத்தை பார்க்கும் போது சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு மாத்திரமே எனவும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்காக சாதகமான யோசனைகளை முன்வைத்தால், அதற்கு பதிலளிக்க தயார் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஏனைய கட்சிகளை சர்வக்கட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக மாற்ற வேண்டும் என்பதை இவர்களின் முயற்சி.அவசரகாலச் சட்டத்தின் கீழ் அடக்குமுறை சட்டங்களை கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டே ஜனாதிபதி அடக்குமுறை சட்டங்களை கொண்டு வருகிறார். ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா என கேள்வி எழுப்புகிறேன். ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தனர் என்பதற்காக பெண்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தன்னை தெரிவு செய்தவர்களை மகிழ்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஜனாதிபதி அந்த அணியை மகிழ்விப்பதற்காக போராட்டகாரர்களை காயப்படுத்துகிறார்.
நாட்டு மக்களின் ஆதரவில்லாதவர்களே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர். நாட்டுக்கு புதிய மக்கள் ஆணை தேவைப்படுகிறது எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.