சாவகச்சேரியில் சைக்கிளில் தெரிவான இருவருக்கு எதிரான வழக்கு! உயர் நீதிமன்றம் முன்னெடுத்துள்ள தீர்மானம்
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்குகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை நாளை காலை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று இடம்பெற்றிருந்தது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு வழக்குகள்
யாழ். சாவகச்சேரி நகர சபை அதன் நகர பிதாவைத் தெரிவு செய்வதற்காக நாளை பிற்பகலில் கூடவிருக்கும் நிலையில் இந்த மனுக்களை நாளை காலை பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானிததுள்ளது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக் கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு வழக்குகளும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தபோதும் ஏனைய வழக்குகள் இருந்த காரணமாக நாளை காலை இந்த வழக்குகளைப் பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
