கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முடக்கப்படுமா? அஜித் ரோஹணவின் பதில்
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முடக்கப்படுமா என்பது குறித்து சுகாதார பிரிவினரே முடிவு எடுக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்களால் எடுக்கப்படும் முடிவுகளை பொலிஸார் நடைமுறைப்படுத்துவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பது தொடர்பான செயலமர்வு வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கோவிட் தொற்று மேலும் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் செயற்பாட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குருணாநகல் குளியாபிட்டிய பகுதி முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளிலும், அதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முடக்கப்படுவதா என்பதை சுகாதார பிரிவினரே முடிவு எடுக்க வேண்டும். சுகாதார பிரிவினரால் எடுக்கப்படும் முடிவுகளை பொலிஸார் நடைமுறைப்படுத்துவர்.
கோவிட் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரி சஹ்ரானால் நடத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்து கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சஹ்ரானின் மனைவியின் தந்தை உட்பட மூவரே குளியாப்பிட்டிய, கொக்குணகொல்ல பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக அடிப்படைவாத கருத்துக்களை வெளியிடுவோர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், தமிழ் மொழி மூல பொலிஸாருக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் வடமாகாண இளைஞர், யுவதிகளிடம் இருந்து தமிழ் மொழி பொலிஸாருக்கு ஆட்சேர்ப்பு செய்ய பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் அதிகளவிலான இளைஞர், யுவதிகளை பங்கு பற்றச் செய்யுமாறு
யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அரச அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், பாடசாலை
அதிபர்கள், பிரேதேச செயலாளர்கள் ஆகியோரை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்
எனவும் தெரிவித்துள்ளார்.