வரலாற்றில் இல்லாதவாறு வரி அதிகரிப்பு: ரணிலிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தல்
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு தனது இயலாமையை மறைக்க முயற்சிப்பதோடு, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான செயன்முறை ரீதியான உத்திகளைப் பின்பற்றத் தெரியாமல் திணறி வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25.03.2026) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாரிய நெருக்கடி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டைப் பொறுப்பேற்ற போது நிலவிய பாரிய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைச் செயன்முறை ரீதியாக நிரூபித்துக் காட்டினார்.
அன்று மேடைகளில் நின்று அவரை விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று அதே திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றார். ரணில் விக்ரமசிங்க செலுத்திய அதே வாகனத்தையே இவர்களும் செலுத்துகின்றனர். எனினும், அதனை முறையாக இயக்கத் தெரியாமல் தட்டுத்தடுமாறி ஓட்டுகின்றனர்.
அரசு தனது இயலாமையை மறைக்க ஊழல் விவகாரங்களையும், ஏனைய விடயங்களையும் கையில் எடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றது. வரிச் சுமையைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார, இன்று வரலாற்றில் இல்லாதவாறு வரிகளை விதித்துள்ளார்.

எரிபொருள் இருப்பு தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறாக, இரண்டே நாட்களில் எரிபொருள் விலைகள் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 119 ரூபாவும், டீசலுக்கு 93 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.
திறைசேரியை நிரப்புவதிலேயே ஆர்வம்
இந்த வரிப்பணத்தை அரசு தற்காலிகமாகக் குறைத்திருந்தால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை, திறைசேரியை நிரப்புவதிலேயே ஆர்வம் காட்டுகின்றது.
எரிபொருள் வரிசைகளை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட கியூ.ஆர். குறியீட்டு முறையைக்கூட இந்த அரசால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. நாட்டில் உள்ள 15 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 8 ஆயிரம் பேருந்துகளுக்கு முறையான கியூ.ஆர். குறியீடுகள் வழங்கப்படவில்லை.
அத்துடன், எமது வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அளவில் நகைப்புக்குறியதாக மாறியுள்ளது. தனிப்பட்ட பழிவாங்கல்கள் அல்லது அரசியல் மேடைப் பேச்சுக்களால் ஒருபோதும் நெருக்கடிகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதைய அரசு தனது அகந்தையைக் கைவிட்டு, ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்று நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.