மீண்டும் போர் பதற்றம்: அமெரிக்காவின் மிரட்டலால் ரத்தான விமானங்கள்
உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது.
இந்த நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது.
போருக்கான அறிகுறி
இது போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனால் வெனிசுலா பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது.

அதன்படி சிறப்பு அவசரநிலையை ஜனாதிபதி நிகோலஸ் அறிவித்து உள்ளார். 'பிளான் இன்டிபென் டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து
இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளன.

ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.
6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.