அருந்திக விமானப் படையில் கடமையாற்றவில்லை:விமானப் படையின் பேச்சாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தான் இலங்கை விமானப் படையின் விமானியாகவும் படை அதிகாரியாகவும் கடமையாற்றியதாக கூறியுள்ளதை விமானப் படை மறுத்துள்ளது.
அருந்திக பெர்னாண்டோ, விமானப் படையில் கடமையாற்றியமைக்கான சான்றுகள் எதுவுமில்லை என விமானப் படையின் பேச்சாளர் குறுப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது சில வன்முறையாளர்கள் தனது வீட்டுக்கு தீ வைத்த காரணத்தினால், தனது வீடு, விமானப் படையில் விமானியாக பணியாற்றியமைக்கான ஆவணங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் அழிந்து போனதாக அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
“நான் விமானப் படை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றினேன் என்பதை நிரூபிக்க தற்போது என்னிடம் எதுவுமில்லை. அன்று விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றால், அது பற்றி குறிப்பேடுகளில் பதிவு செய்வார்கள்.
அப்போது கணனியில் பதிவு செய்ய வசதிகள் இருக்கவில்லை. எனது வீடு தீ வைக்கப்பட்ட காரணத்தினால், அந்த ஆவணங்கள் அழிந்து போயின” அருந்திக பெர்னாண்டோ கூறியிருந்தார்.
இந்த நிலையில், அருந்திக பெர்னாண்டோ, ஒரு முறை விமானத்தில் பறப்பது தொடர்பான திறன் தேர்வு பரீட்சையில் கலந்துக்கொண்ட போதிலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை எனவும் விமானப்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானப் படை அதிகாரியாக இணைந்துக்கொண்டமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றும் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.