எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு காரணம் போதைப்பொருள் பாவனை: விசேட வைத்திய நிபுணர் (Video)
மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு காரணம் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று (01.11.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ''உலக எயிட்ஸ் தினமானது 1988ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எயிட்ஸ் நோயாளர்கள்
அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி 'சமத்துவத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அதேநேரம் 4686 எயிட்ஸ் நோயாளர்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 3377 பேர் ஆண்களாகவும் 1309 பேர் பெண்களாகவும் காணப்படுகின்றார்கள்.
வடமாகாணத்தில் 137 பேர், மன்னார் மாவட்டத்தில் 11 பேர் எயிட்ஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் பாவனை
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையும் ஆண்களுக்கிடையேயான பாலியல் தொடர்பு காரணமாக எயிட்ஸ் தொற்று ஏற்படுகின்றது.
இதனைத் தடுக்கும் முகமாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் எயிட்ஸ் நோயானது பாரதூரமான அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் 48 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எயிட்ஸ் தொற்றோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் 1.5 மில்லியன் பேர் புதிதாக 2001 ஆம் ஆண்டின் பின் உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டவர்கள். இலங்கையை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 400 க்கு மேற்பட்டவர்கள் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அந்த சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டத்திலும் ஒருவர் எயிட்ஸ் நோயோடு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்’’ என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.