சர்ச்சையை ஏற்படுத்திய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது விவகாரம்.. சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானம்
உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
1983ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நீதித்துறைச் சட்டமும் திருத்தப்பட்டு, கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது.
இந்த புதிய திருத்தங்களின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 63ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு 62ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி
சட்டமா அதிபரின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலங்கள் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், வர்த்தமானியில் வெளியாகி 14 நாட்களுக்குள் பொதுமக்கள் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.

நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைப் பெற்று வழக்குகளை விரைவாக முடிப்பதே இதன் முக்கிய நோக்கம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் 1 மில்லியன் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் வரை உள்ள நிலையில், இலங்கையில் 20 நீதிபதிகளே உள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல் திடீரென ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது வெளிப்படைத்தன்மையற்றது என்றும், இதற்கு மக்கள் தீர்ப்பு தேவைப்படலாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இதற்கு மக்கள் தீர்ப்பு தேவையில்லை என அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam