அரச பொசன் விழா தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அரச பொசன் விழாவை மிஹிந்தலை ரஜ மஹா விகாரையை மையமாக கொண்டு உரிய மரியாதையுடன் ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மிஹிந்தலை புனித பூமியில் நடைபெறும் அரச பொசொன் விழா தொடர்பில் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை அரச பொசன் விழாவை முன்னிட்டு பிரதான நிகழ்வு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம ரஜ மஹா விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச பொசொன் விழாவை முன்னிட்டு மிஹிந்தலை சுற்று வட்டப் பாதையை புனரமைத்துத் தருமாறு மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையைத் துரிதமாக நிறைவேற்றுமாறு பிரதமரினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரை 2007ஆம் ஆண்டு புனித பூமியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிழைகள் காரணமாகப் புனித பூமி ஒன்றுக்குக் கிடைக்க வேண்டிய வசதிகள் வசதிகள் இன்று வரை வழங்கப்படவில்லை என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அப்பிழைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரையை புனித பூமியாக மீண்டும் வர்த்தமானியில் அறிவிக்குமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் சிதுல்பவ்வ ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி மெடரம்ப ஹேமரதன தேரர் விகாரையின் சாலை அமைப்பைப் புனரமைப்பது தொடர்பில் திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.
அதற்கமைய யால தேசிய பூங்காவின் மத்தியில் அமைந்துள்ள சிதுல்பவ்வ ரஜ மஹா விகாரையின் குறித்த சாலை அமைப்பைச் சரளை இட்டு புனரமைக்குமாறு பிரதமரினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, மகிந்த
அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலபத்தி, பிரதமரின் செயலாளர் காமினி
செனரத், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
பேராசிரியர் கபில குணவர்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.