வட மாகாணத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
வட மாகாணத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (16.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால்நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது. இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன.
வடக்கில் 4 இலட்சம் மாடுகள், 10 ஆயிரம் எருமை மாடுகள், 3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

கால்நடைகளுக்கு ஏற்பட்டவுள்ள பாதிப்பு
இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன.
அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது.
இதனால் வருமானமும் அதிகரிக்கிறது. எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன.
இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால், கால் நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன.
இதனால் கால் நடைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கால்நடை தீவனங்கள்
சுமார் 30 ஆண்களுக்குப் பின்னர் வடக்கில் ஒரு துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோடை காலத்தில் நீர் இல்லாமலும்,மழை காலத்தில் வெள்ளத்தாலும் மாடுகள் இறப்பது வழமை.
ஆனால் இப்போது முதல் தடவையாக குளிரால் மாடுகள் அதிகளவில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளன. இதற்கு காரணம் மாடுகளில் கொழுப்புப்படை இன்மையே ஆகும்.
90 வீத மாடுகளுக்கு கொழுப்புப்படை இல்லை. இந்த பெரும் போக காலத்தில் அவைகளுக்கு தீவனம் இல்லை.இம்முறை தான் இந்தப் குளிர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனை நாம் கவனமாக அணுக வேண்டும். திறந்த வெளிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அலட்சியமாக உள்ளனர். பண்ணைகளைப் பதிவு செய்வதில்லை. மாடுகளின் இலக்கங்களை பெறுவதில்லை.

சட்ட நடவடிக்கை
உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெறுவதில்லை.இவ்வாறு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லை. கால்நடைகளுக்கான பராமரிப்பு போதியளவு இல்லை.
ஆகவே கால் நடைகளின் இறப்புகளை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைளை, சில சட்டங்களை பிறப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணியுள்ளோம்.
முறையான பதிவு மூலம் பண்ணைகளை நடாத்தி, அந்த கால்நடைகள் உயிரிழந்திருந்தால் ,அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும் பட்சத்தில் நாம் பண்ணையாளர்களுக்கு வழங்குவோம்.
குளிரால் யாழ்ப்பாணத்தில் 1, கிளிநொச்சியில் 529, முல்லைத்தீவில் 524, வவுனியா 28 மாடுகளும், யாழில் 77 ஆடுகள், கிளிநொச்சி 266 ஆடுகள், முல்லைத்தீவில் 199 ஆடுகள், வவுனியாவில் 52 ஆடுககளும் உயிரிழந்துள்ளன என தெரிவித்துள்ளார்.