பிரதமர் மஹிந்த பிறப்பித்துள்ள பணிப்புரை (Photos)
நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு மாத்தறை மாநகர சபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பணிப்புரை விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாத்தறை மாநகர சபை அதிகாரிகள் மற்றும் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரிகளுடன் நாடாளுமன்ற குழு அறை 02இல் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை நகரில் வாழும் மற்றும் நகருக்கு வருகைத்தரும் மக்களுக்கு மிகவும் வசதியான சூழல் மற்றும் நகர்ப்புற வசதிகளுடன் கூடிய பிரதேசத்தை உருவாக்குவதே மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தின் நோக்கமாகும்.
மாத்தறை நகரின் நிர்வாக செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், பொது வைத்தியசாலையை நவீனமயப்படுத்தி வசதிகளை ஏற்படுத்துதல், முறையான வாகன தரிப்பிடத்தை நிர்மாணித்தல் போன்றவை அவசியமானது என ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாத்தறை மாநகர சபை மற்றும் மாத்தறை பொது வைத்தியசாலையின் உதவி தேவை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு அமைய, மாத்தறை நில்வலா ஆற்றங்கரை பூங்காவின் பாதுகாப்பு வேலியை விரைவாக அமைக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாத்தறை நகரின் வாகன நெரிசலை குறைத்தல், அகுரஸ்ஸ நகரை அண்மித்த வீதிகளை அகலப்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.