தமிழர் பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
போக்குவரத்து விதிமீறலைத் தவிர்ப்பதற்காக இலஞ்சம் பெற்றதாகக் கூறி முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை
ஜேசிபி வகை இயந்திரத்தை செலுத்திய சாரதிக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக முதலில் 25,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகத்துக்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதியிடமிருந்து 12,500 ரூபாவை பெற்றுக்கொண்டு மீதி தொகையை செலுத்தும் வரை சாரதியின் தேசிய அடையாள அட்டையை தம் வசம் வைத்திருந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் - யது, கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




