யாழில் பாடசாலை அதிபர் ஒருவரின் முறைகேடான செயல்: ஆசிரியர் சங்கம் கண்டனம்
யாழ்.பருத்தித்துறை மெடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர், தனது நிர்வாக முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக, எந்தவொரு அடிப்படையான ஆதாரங்களும் இல்லாமல், ஐந்து ஆசிரியர்களுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்றையதினம் (26.07.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த கண்டனத்தை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த மாதமளவில் மாணவியொருவரை பாடசாலையில் சேர்க்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடமிருந்து அதிபருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த கடிதத்துடன், இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் “ஆளுநரின் முறைகேடான கடிதத்தை நிராகரித்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையின் அதிபர் இந்த பாடசாலையின் அதிபர் போல் ஏனைய பாடசாலையின் அதிபர்களும் இருப்பார்களா? ” என செய்தியும் வெளிவந்திருந்த நிலையிலேயே, குறித்த அதிபரால் இத்தகைய அவசியமற்ற செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி ஆளுநரின் கடிதம் குறித்த பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் மேலும் மூன்று இடங்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.
சந்தேக முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை
அத்துடன் மேற்படி கடிதம் பாடசாலை மின்னஞ்சலுக்கே சென்றுள்ளதாக அறியப்படும் நிலையில், மின்னஞ்சலின் கடவுச் சொல்லைக் கையாளும் எந்தவொரு உத்தியோகத்தருக்கு எதிராகவும் அதிபரால் சந்தேக முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் - குறித்த ஐந்து பேருக்கெதிராக மட்டும் அதிபரால் மேற்கொள்ளபட்ட முறைப்பாடானது, அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைகேடுகளுக்கு இடைஞ்சலாக செயற்பட்டு வரும் பிரதி அதிபர், உப அதிபர் உட்பட்ட ஐவரைப் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
குறித்த அதிபரின் பழிவாங்கல் செயற்பாடொன்று தொடர்பாக, ஏற்கனவே பாடசாலையின் உப அதிபரால் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வடமாகாண முன்னாள் ஆளுநரின் கடிதத்தின் பேரிலும், ஏனைய சிலரின் கடிதங்களின் மூலமும், பாடசாலைக்குரிய வெட்டுப்புள்ளி நடைமுறைகளை மீறி, குறித்த அதிபர் அனுமதிகளை ஏற்கனவே வழங்கியுள்ளார்.
குறித்த அதிபரின் ஏனைய பல முறைகேடுகள் தொடர்பாக, பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், மற்றும் பழைய மாணவிகள் சங்கத்திடமிருந்தும், வலய மற்றும் மாகாணக்கல்வி திணைக்களங்களுக்கும், வடக்கு மாகாணக்கல்வி அமைச்சுக்கும், மத்திய கல்வி அமைச்சுக்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும், பொது கணக்குப் பரிசோதகர் அலுவலகத்திற்கும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையையும் அறிகின்றோம்.
பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதி இன்றி அதன் பெயரைப்பயன்படுத்தி இரண்டு வர்த்தக நிலையங்களில் பெருந்தொகை பணத்தை அதிபர் பெற்றுள்ளமை தொடர்பான முறைப்பாடுகளும் வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளபோதும், அதிபர் மீது பொருத்தமான நடவடிக்கை எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
அதிபரின் உள்நோக்கம்
குறித்த கடிதம் வெளிச் சென்றமைக்குப் பொறுப்புக்கூறவேண்டியது அதிபரேயாவார். அவர் பெறுப்பற்ற நிலையிலிருந்துவிட்டு, எவ்வித அடிப்படை ஆதாரங்களையும் நிரூபிக்க முடியாத நிலையில், சந்தேகம் என்ற பேரில், ஐவரை மட்டும் குறிவைத்து பழிவாங்க நினைப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
திணைக்கள ரீதியான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதன் மூலம், அதிபரின் உள்நோக்கம் வலுவான சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதிபருக்கு எதிராக திணைக்களங்களில் ஏற்கனவே முறைப்பாடுகள் உள்ள நிலையில், திணைக்கள ரீதியான விசாரணையொன்றைக் கோரமுடியாமல், பொலிஸ் நிலையம் சென்று ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்கு முயன்றுள்ளார்.
குறித்த அதிபர் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக திணைக்கள ரீதியிலான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |